Tender irregularities case high court asks investigation details : சென்னையில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் கட்டுவதற்கு 590 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கில் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர் மனுதராரக சேர்க்க நீதிபதிகள் அனுமதி.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு 300 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 800 சாலைகள் அமைப்பதற்காக 48 டெண்டர்களும், 290 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்கள் கட்டுவதற்காக 73 டெண்டர்களும் கோரப்பட்டன. இந்த டெண்டர் ஒப்பந்தங்களில் அனுமதிக்கப்பட்ட பொருள்களை மாற்றி வேறு பொருள்களில் பணிகளை செய்வதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டம் குறித்த வீடியோ
இந்த டெண்டரில் முறைகேடுகள், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளதாகவும், சில ஒப்பந்ததாரர் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும், டெண்டர் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் எனவே இது கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டுநவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், அந்த புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதது குறித்தும் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள், மாநகராட்சி ஆணையருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கும் புகார் அளித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே இந்த புகார் தொடர்பாக மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்யவும் அதனை சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அப்போது நீதிபதிகள் மனுதாரரின் புகார் தொடர்பாக, 2019 மார்ச் மாதம் ஆரம்பகட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டு, டி எஸ் பி சங்கர் தலைமையில் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், சென்னையில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கபடுவதில்லை எனவும் அனைத்து சாலை பணிகளையும் நீதிமன்றம் கண்காணிக்க முடியாது எனவும் விதிகளின் படி சாலைகள் அமைக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை எனவும் தெரிவித்தனர்.